தமிழ்நாட்டில் ஏற்றுமதியை ஊக்குவிக்க மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப் பட்டுள்ளது. அக்குழு 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஏற்றுமதியை ஊக்குவிக்க புதிய திட்டங்களை செயல்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
“ஏற்றுமதியில் ஏற்றம்” முன்னணியில் தமிழ்நாடு என்ற மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், ஏற்றுமதியை ஊக்குவிக்க ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதன்படி, மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது இக்குழுவில் நிதித்துறைச் செயலாளர், தொழில்துறைச்செயலாளர், வேளாண்மைத்துறைச் செயலாளர், கால்நடைத்துறைச் செயலாளர், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயலாளர், மற்றும் ஏற்றுமதி நிறுவன அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழு குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஏற்றுமதியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்துறை துறையின் முதன்மைச் செயலாளர் தலைமையிலான ஒரு நிர்வாக துணைக்குழுவும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு தலைவரான தலைமைச்செயலாளருக்கு அறிக்கைகளை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







