சென்னையில், பிரபல பிரியாணி கடையின் வருமானம் 11 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாக நாடகமாடி அபகரிக்க முயன்ற 2 ஊழியர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மண்ணடியை தலைமையிடமாகக் கொண்டு, 30 இடங்களில் பிரபல பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் தினசரி வசூலாகும் பணத்தை, அந்த கடை ஊழியர் சுரேந்திரன் என்பவர் மண்ணடி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு சென்று கொடுப்பது வழக்கம். இந்நிலையில், பெரம்பூர் பகுதியில் உள்ள பிரியாணி கடையில் பணத்தை வாங்கிக் கொண்டு வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலை வழியாக செல்லும் போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் தன்னை தாக்கி 11 லட்சத்து 88, 000 ரூபாய் பணத்தை பறித்து சென்றதாக சுரேந்திரன் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, வழிப்பறி நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அதே கடையின் மற்றொரு ஊழியரான பிரகாஷ் என்பவர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சுரேந்திரனும், பிரகாஷூம் திட்டமிட்டு, பணத்தை அபகரிக்க நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, சுரேந்திரன், பிரகாஷ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.அ




