வேலூரில், 3510 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தை வேலூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்ட தொடக்க விழா மற்றும் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் வசிக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் இன்று நடக்கிறது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மேல்மொணவூரில் வசிக்கும் 220 இலங்கை தமிழர் குடும்பங்கள் உள்பட 3,510 பேருக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
பின்னர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு பல லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலர்கள், வேலூர் மாவட்ட கலெக்டர் உள்பட அரசுத்துறை உயர்அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கிறார்கள். முதலமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில், இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பதனை மாற்றி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.







