இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று இரவுக்குள் ராஜினாமா செய்துவிடுவார் என்று சபாநாயகர் மகிந்த யாப அபேவர்த்தனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அதிபர் கோத்தபய ராஜபக்ச தன்னுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்று இரவுக்குள் ராஜினாமா கடிதம் உங்களுக்கு கிடைக்கச் செய்வேன் என கோத்தபய தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாட்டின் புதிய அதிபர் திட்டமிட்டபடி வரும் 20ம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று உறுதி அளித்துள்ள சபாநாயகர் மகிந்த யாப அபேவர்த்தனா, பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, பாதுகாப்புப் படையினரின் எதிர்ப்பையும் மீறி, கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளனர். கட்டடத்தின் உச்சிக்குச் சென்ற அவர்கள் அங்கு இலங்கை தேசிய கொடியை நிறுவி பறக்கவிட்டனர்.
இதனிடையே, ரணில் விக்ரமசிங்கே நாட்டில் அவசரநிலையை பிறப்பித்துள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
அதிபரே நியமித்தலோ அல்லது அதிபர் பதவி காலியானாலோ அல்லது சபாநாயகரின் ஆலோசனையின் பேரில் தலைமை நீதிபதி அறிவித்தாலோ மட்டுமே இலங்கை பிரதமர் அதிபருக்கான அதிகாரத்தைப் பெற முடியும் என அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்த மூன்றும் நடைபெறாத நிலையில், அதிபருக்கான அதிகாரத்தை பிரதமர் பயன்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
எனவே, நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தவோ, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவோ ரணில் விக்ரமசிங்கேவுக்கு அதிகாரம் இல்லை என சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.