இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் – 14 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!

ஒரே நாளில் 3 இடங்களில் தமிழ்நாடு மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஐந்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். கோடியக்கரை அருகே நேற்று மாலை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு பைபர் படகில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 மீனவர்களையும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதில் ஆனந்த், முரளி சாமிநாதன், வெற்றிவேல் அன்பரசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் அவர்களிடமிருந்த 2 லட்ச ரூபாய் மதிப்பிலான 2 செல்போன்கள், வாக்கி டாக்கி, GPS, எக்கோ சவுண்டர், பேட்டரி உள்ளிட்டவைகளை கடற்கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இதையடுத்து படுகாயங்களுடன் இன்று அதிகாலை நாகை வந்த மீனவர்களை சக மீனவர்கள் நாகப்பட்டினம் ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதேபோல் செருதூர் மீனவர்கள் 4 நான்கு பேர் மீதும், வெள்ளபள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்த 5 மீனவர்கள் மீதும் இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதலில் ஈடுபட்டத்துடன் அவர்களிடம் இருந்து இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அவர்களும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 3 பைபர் படகுகளில் 14 மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.