ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இடநெருக்கடி : ஒரே படுக்கையில் 3 நோயாளிகள் – அரசுக்கு நயினார் கண்டனம்…!

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசு மருத்துவமனைகள் என்றாலே அலட்சியமா? ஏழை மக்கள் என்றாலே இளக்காரமா? தமிழகத்தின் மிக முக்கியமான அரசு மருத்துவமனையான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், இடநெருக்கடியின் காரணமாக ஒரே படுக்கையில் கிட்டத்தட்ட 3 நோயாளிகள் வரை அனுமதிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி கடும் கண்டனத்திற்குரியது.

மருத்துவமனையில் நடைபெறும் புனரமைப்பு பணிகளின் காரணமாக, நோயாளிகள் அனைவரையும் ஒரே பிளாக்கில் இடம் மாற்றியதன் விளைவு தான், இந்த இட நெருக்கடிக்கு காரணம் என்று சொல்லப்படுவது , தமிழக சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நிர்வாகக் குளறுபடிக்கான சான்று.

தலைமைச் செயலகத்தில் ஏதாவது புனரமைப்பு பணிகள் நடந்தால், அரசு அமைச்சர்களை எல்லாம் இப்படித்தான் ஒரே அறையில் அடைத்து, ஒரே சீட்டில் இடித்துக் கொண்டு அமர வைப்பார்களா? உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களுக்கு நல்ல காற்றோட்டமான, வசதியான படுக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற அடிப்படை கூட திரு. ஜோசப் விஜய் அரசுக்கு தெரியவில்லையா? அல்லது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் எல்லாம் விளிம்புநிலை மக்கள் தானே என்ற இளக்காரமா?

முந்தைய திமுக அரசைப் போலவே, தற்போதைய தவெக அரசும், அரசு மருத்துவமனைகளையும், அதை நம்பியிருக்கும் ஏழை மக்களையும் அலட்சியப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

எனவே, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தரமான படுக்கைகள், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போதிய அளவில் ஏற்பாடு செய்து தர வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் திரு. அருண்ராஜ் அவர்களையும், முதல்வர் திரு. விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.