தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்று பரவிய தகவலில் உண்மை இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்தயேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை காலை 7 மணிக்கு 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குகிறது. தேர்தலுக்கான ஆயத்தபணிகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. வாக்குப்பதிவு நடத்த தமிழகம் முழுவதிலும் சுமார் 88, 900 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சிசிடிவி கேமிராக்களின் உதவியுடன் வாக்குபதிவை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கவனிக்க முழு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் கடைசி ஒரு மணி நேரத்தில், வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மேலும் 4,17,521 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆயத்த பணிகள் தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு சத்தியபிரதா சாகு அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற தகவலில் உண்மை இல்லை. நாளை வாக்குப்பதிவு நடத்துவதற்கான எல்லா முன்னேட்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்’ என்று கூறினார்.







