எனது நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிலர் களங்கம் விளைவிக்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் ரயிலின் புதிய ரயில் சேவையை புதுடெல்லி மற்றும் போபால் இடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதன் பின்னர் இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்ததாவது..
” புது டெல்லி மற்றும் போபால் இடயே வந்தே பாரத் சேவையை ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதுபற்றி என்னிடம் தெரிவிக்கப்பட்டபோது, நான் ஒரு விஷயத்தை உறுதியாக கூறினேன். இந்த செய்தி வெளியாகும்போது நிச்சயமாக எனது காங்கிரஸ் நண்பர்கள் இது பிரதமர் நரேந்திர மோடியின் ஏப்ரல் ஃபூல் (April Fool) எனது கூறுவார்கள் என முன்பே அவர்களிடம் தெரிவித்தேன். அதேபோல ஏப்ரல் 1-ம் தேதி திட்டமிட்டபடி வந்தே பாரத் ரயில் சேவை கொடி அசைத்து துவக்கிவைக்கப்பட்டுள்ளது. இதுதான் எங்கள் நம்பிக்கையின் அடையாளம்.
இதற்கு முன்பு இந்தியாவை ஆட்சி செய்த அரசுகள் வாக்கு வங்கிக்கான அரசியலில் அதிகமாக கவனம் செலுத்தின. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அவர்கள் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் ஒரு குடும்பத்தை மட்டுமே முதல் குடும்பமாகக் கருதினார்கள். இரண்டாவது, மூன்றாவது குடும்பங்கள் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை.
2014-ஆம் ஆண்டுக்கு முன்பு இந்திய ரயில்வே துறை மோசமான நிலையில் இருந்தது. பொது மக்கள் குறைகளை தெரிவித்தாலும் அதற்கான தீர்வு கிடைக்காது என்பதால் குறைகளைச் சுட்டிக்காட்டுவதை மக்கள் நிறுத்திக்கொண்டனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 9 ஆண்டுகளில், ரயில்வே துறைக்கான பட்ஜெட் உயர்ந்துள்ளது. 2023ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டிற்குப் பிறகு பிரதமர் மோடியின் நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் களங்கம் விளைவிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிலர் வேலை இருக்கிறார்கள். அவர்கள் பிரதமருக்கு எதிராக என்ன சதி செய்தாலும்ஒவ்வொரு இந்தியனும் மோடிக்கு பாதுகாப்பு கவசமாக மாறி இருக்கிறார்கள்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.







