இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு சென்று மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வென்று இந்திய கிரிக்கெட் அணி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான, மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பில் இன்று நடந்து வருகிறது. மழை காரணமாக ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில், நிதிஷ் ராணா, ராகுல் சாஹர், சேதன் சகாரியா, கிருஷ்ணப்பா கவுதம், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் ஆகிய 5 வீரர்கள் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். சமீரா பந்துவீச்சில் 13 ரன்களில் வெளியேறினார் தவான். அடுத்து வந்த சஞ்சு சாம்சனும் பிருத்வி ஷாவும் நிதானமான ஆட்டத்தில் ஈடுபட்டனர். 49 ரன்கள் எடுத்த நிலையில் ஷனகா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார் பிருத்வி.
அணியின் ஸ்கோர் 118 ஆக இருந்தபோது, நன்றாக ஆடிக்கொண்டிருந்த சஞ்சு சாம்சன் ( 46 ரன்கள்) ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மணிஷ் பாண்டே, தன் பங்குக்கு 11 ரன்களுடன் திருப்திப்பட்டு வெளியேற, அடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ் அதிரடியாக ஆடினார். 37 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால், இந்திய அணி 43.1 ஓவரில் 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இலங்கை தரப்பில் அகிலா தனஞ்செயா, பரவீன் ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்டு களையும் துஷ்மந்த சமீரா 2 விக்கெட்டுகளையும் சமீகா, துஷன் சனகா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். அடுத்து இலங்கை அணி ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது.








