கோவை மாவட்டம் சூலூரில் தமிழக அரசால் பாரதிதாசன் விருது பெற்ற எழுத்தாளர்கள் செந்தலை கவுதமன், கலைப்பித்தன் ஆகியோருக்கு சூலூர் தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு இருவருக்கும் பொற்கிழி மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். செந்தலை கவுதமன், கலைப்பித்தன் ஆகியோர் இதுவரை சைக்கிளில் பயணம் செய்வதை அறிந்த சிவகுமார், நடிகர்கள் சூர்யா , கார்த்தியிடம் தெரிவித்து அவர்களுக்கு இரு சக்கர வாகனங்களை வாங்கி பரிசளித்தார்.
பின்பு மேடையில் பேசிய சிவகுமார், “சூலூருக்கும் சுயமரியாதை கொள்கைக்கும் நிறைய தொடர்பு உண்டு. தந்தை பெரியார் கடவுள் மறுப்பை பேசினாரே தவிர, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவமரியாதை செய்தது இல்லை, குன்றக்குடி அடிகளார் இருக்கையில் அமர்ந்திருந்த போது அவருக்கு இணையாக உட்கார மறுத்தவர் பெரியார். காஞ்சி பெரியவர் மயிலாப்பூர் வந்திருந்தபோது திராவிடர் கழக தொண்டர்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். அதைக் கேள்விப்பட்டவுடன் தொண்டர்களுக்கு அறிவுரை கூறி காஞ்சி பெரியவருக்குப் பாதுகாப்பு கொடுத்தவர் பெரியார்.” என்று தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், “காலங்கள் கூட கூட பெரியார் மீது மரியாதை கூடிக் கொண்டே செல்கின்றது, அவர் மீது விமர்சனர்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றது. பெரியார் படம் மீது ஒரு சிறுவன் சிறுநீர் கழிக்கின்றான். இன்னொரு சிறுவன் செருப்பால் அடிக்கின்றான். அவர் என்ன பாவம் செய்தார்? இப்படி செய்வதால் அவர்களுக்கு என்ன சந்தோஷம் கிடைத்து விடப்போகிறது என்று தெரியவில்லை. யார் தூண்டுதலில் அவர்கள் இப்படியெல்லாம் செய்கின்றனர் என்றும் தெரியவில்லை. ஆனால், இதையெல்லாம் பார்த்தால் பெரியார் சந்தோஷப்பட்டிருப்பார். அவர்களை பார்த்து, ‘பொதுவாழ்வுக்கு வந்த பிறகு மானம், ரோஷம் எல்லாம் பாக்கமுடியுமா’ என்று கேட்டிருப்பார். அவர் ஆதிக்க சக்திகளைத்தான் வெறுத்தார். பிராமணீயத்தை தான் வெறுத்தார், பிராமணர்களை வெறுக்கவில்லை. இன்று ஒடுக்கப்பட்ட மக்களும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் உட்பட அனைத்து துறைகளிலும் புற்றீசல் போல் இருக்கிறார்கள் என்றால் அதற்கு தந்தை பெரியார் போட்ட விதைத்தான் காரணம்” என்றும் குறிப்பிட்டார்.
சமீப காலங்கலாக தமிழ் திரையுலகினர் சிலர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசிவரும் கருத்துக்களை மோடி எதிர்ப்பாளர்கள் கடுமையாக விமர்சித்துவந்தனர். இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி புகழ்ந்து பேசி திமுக ஆதரவாளர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகுமார். இதனைத்தொடர்ந்து பெரியார் குறித்து அவர் பேசிய இக்கருத்துக்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.