14 ஆண்டுகளுக்கு பிறகு சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சிவகாசி இந்து நாடார் மகமை பண்டுக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 8 மணியளவில் விக்னேஷ்வரபூஜை, புண்யாகவாசனம், விசேஷ நந்தி பூஜை ஆகியவை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகளும் நடத்தப்பட்டன .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இன்று காசி, ரமேஸ்வரம் உள்ளிட்ட அனைத்து புண்ணிய தள தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு கோயில் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை சர்வசாதகம் சங்கர் கணேஷ் பட்டர், சர்வசாதகம் செல்வம் பட்டர் ஆகியோர் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூரில் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த முத்தாம்பிகை அபிராமேஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெறும் குடமுழக்கு விழாவில் ராஜகோபுரம் மற்றும் கருவரை கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றபட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- பி. ஜேம்ஸ் லிசா