கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், ஹாங்காங்கைச் சேர்ந்த ஆண் செவிலியருக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக அந்த நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக. 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, இதன் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல நாட்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை பாதுகாக்கவும், மருத்துவமனைகள் தாக்கப்படுவதை தடுக்கவும் தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கிடையே பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மட்டுமின்றி, முதுநிலை மருத்துவர்கள் தேர்ச்சிக்கு பணம் பெறுவது, மருத்துவமனையில் போதைப் பொருள் புழக்கம் , கடத்தல் போன்றவற்றிக்கு கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உடந்தையாக இருந்ததாகவும் புகார் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த நிலையில், ஹாங்காங்கைச் சேர்ந்த ஆண் செவிலியருக்கு கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் பாலியல் சீண்டல் அளித்ததாக அந்நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. யாவ் மா தேய் மாகாணத்தில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் கடந்த 2017 ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்றபோது சந்தீப் கோஷ் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அதாவது, மருத்துவமனையின் அறையில் செவிலியருக்கு பயிலும் மாணவர்கள் ஆடை மாற்றிக் கொண்டிருக்கும்போது உள்ளே சென்ற சந்தீப் கோஷ் மாணவர் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சம்பந்தப்பட்ட மாணவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக அப்போதே விசாரணை நடைபெற்ற நிலையில், தவறுதலாக கைப்பட்டதாகவும், வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் சந்தீப் கோஷ் விளக்கம் அளித்ததாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.







