ஷேர்சாட் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்து மாணவியின் ஆபாச படத்தை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தற்போது
பிளஸ்- 2 முடித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டம் என்பதால்
இந்த மாணவி ஆன்லைன் மூலம் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஆன்லைன் என்பதால்
ஸ்மார்ட் போனை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது ஷேர்சாட் என்ற செயலின் மூலம் பழனியை சேர்ந்த ஜேசுதாஸ் என்ற வாலிபர் அவருக்கு பழக்கமாகி உள்ளார். இதன் பின்னர் அடிக்கடி இருவரும் செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்த போது ஜேசுதாஸ் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஜேசுதாஸ் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு முத்தம் கொடுத்து உள்ளார். அதனை அந்த மாணவிக்கு தெரியாமல் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் ஜேசுதாஸ் நடவடிக்கை பிடிக்காததால் மாணவி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை வாட்ஸ்- அப்பிற்கு ஜேசுதாஸ் மாணவியும், தானும் சேர்ந்து இருக்கும் ஒரு புகைப்படத்தை அனுப்பி இருந்தார். அந்த புகைப்படத்தை அனுப்பி தனக்கு பணம் தர வேண்டும், அப்படி தரவில்லை என்றால் இந்த படத்தை சமூக வலைத்தளத்தில் அனுப்பி விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இதை அடுத்து அந்த மாணவி இது குறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார்
செய்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஜேசுதாசை தேடி வந்தனர். அப்போது ஜேசுதாஸ் கோவையில் உள்ள ஒரு பிஸ்கட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஜேசுதாசை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவரும் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததும், மாணவி தன்னுடன் இருக்கும் படத்தை அவரது தந்தைக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து ஜேசுதாஸ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.







