டெல்லியில் காற்று மாசை குறைக்க 5 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லியில் தற்போது நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த மாசு நிறைந்த காற்றை மக்கள் சுவாசிக்கும்போது உடல் ரீதியாகப் பல்வேறு பிரச்சனைகள் வரக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து அங்கு நிலவும் கடும் காற்று மாசை தடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காற்று மாசையே கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கொரோனா 3வது அலை ஏற்பட்டால் எப்படிக் கட்டுப்படுத்துவீர்கள் என மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியது.
இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்த மத்திய அரசு, டெல்லியில் காற்று மாசை குறைக்க 5 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. மேலும், 3வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மருத்துவமனைகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் காற்று மாசுபாட்டின் காரணமாகக் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் அந்த பணிகள் தேக்கம் அடைந்திருப்பதாகவும் டெல்லி அரசு கூறியது.
மருத்துவமனை கட்டுமான பணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தினமும் காற்று மாசு வழக்கை விசாரித்துக்கொண்டிருக்க முடியாது என்றும் எச்சரித்தது.