29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

காவலர் குடியிருப்புகளை ஒதுக்குவதில் பாரபட்சம் ; காவலர்கள் குமுறல்

சென்னையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட காவலர் குடியிருப்பில் சீனியர் காவலர்களுக்கு வீடுகளை ஒதுக்காமல் புதிதாக பணியில் சேர்ந்த காவலர்களுக்கு வீடு ஒதுக்க திட்டமிட்டிருப்பதாக வரும் தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காவலர் வீட்டுவசதிவாரியம் சார்பில் கட்டப்பட்ட காவலர்கள் குடியிருப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 8 ஆம் தேதி திறந்து வைத்தார். இதில்  புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்களுக்காக 13 அடுக்குமாடி குடியிருப்பில் 832 வீடுகள் ரூ.100 கோடியில் கட்டப்பட்டது. வழக்கமாக ஆயுதப்படை போலீசார் உள்ளிட்ட போலீசாருக்கு 450 சதுர அடியில் மட்டுமே வீடு கட்டப்பட்டிருக்கும். ஒரு படுக்கை வசதிகொண்ட இந்த வீட்டில் மிகுந்த சிரமத்தோடுதான் காவலர்கள் வசித்து வருவது வழக்கம். ஆனால் காவல்துறை வரலாற்றில் காவலர்களுக்காக 680 சதுர அடியில் 2 படுக்கைகள் கொண்ட வீடுகள் இம்முறைதான் கட்டப்பட்டது. இதனால் புதிதாக செல்லும் வீட்டில் குடும்பத்துடன் சற்று வசதியாக வாழலாம் என காவலர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த 832 வீடுகளில் ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றும் 109 பேருக்கு சீனியாரிட்டி அடிப்படையில் கீழ்தளம், மற்றும் முதல் தளத்தில் வீடுகள் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இதற்கான சீனியராரிட்டி பட்டியலும் ஆயுதப்படை துணை கமிஷனரால் தயாரிக்கப்பட்டது. இதேபோல ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்களில் சீனியர்கள் என்ற அடிப்படையில் வீடுகளை ஒதுக்கப்படும் எனவும் அறிவித்து இதற்காக மனுக்களையும் பல மாதங்களுக்கு முன்பே சென்னை மாநகர தலைமையிட அதிகாரிகளால் பெறப்பட்டது. தற்போது வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் இன்னும் வீடுகளை யார், யாருக்கு ஒதுக்கியுள்ளோம் என்ற பட்டியலை வெளியிடவோ, வீடுகளை ஒதுக்கவோ இறுதி முடிவெடுக்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு தலைமைக் காவலர்களுக்காகத்தான் கட்டப்பட்டது. எனவே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இந்த வீடுகளை ஒதுக்க முடியாது.

மேலும் ஆன் லைன் மூலம் மனு செய்தவர்களுக்கு மட்டுமே பரிசீலனை செய்து வீடுகளை ஒதுக்குவோம் என தலைமையிட உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது வீடுகளுக்காக காத்திருக்கும் 109 சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் மற்றும் குடும்பத்தினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு காரணம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 450 சதுர அடியில் வளர்ந்த குழந்தைகளோடு போராடி வாழும் இவர்கள் இனியாவது சற்று பெரிய வீட்டில் வசிக்கலாம் என கனவு கண்டுகொண்டிருந்னர். இந்தநிலையில் அதிகாரிகளின் இத்திட்டம் தங்கள் கனவையே சிதைத்துவிடும் என்கின்றனர்.  சீனியர்களான தங்களுக்கு வீடுகளை ஒதுக்காமல் தங்களிடம் பணியாற்றும் ஜூனியர் ஆயுதப்படை காவலர்களுக்கு இந்த வீட்டை ஒதுக்கவே அதிகாரிகள் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

பொதுவாக பொதுப்பணித்துறை மற்றும் வீட்டுவசதிவாரியத்தால் கட்டப்படும் வீடுகளில் அரசு அதிகாரிகளுக்கு வீடுகளை ஒதுக்கும்போது அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் மற்றும் வீட்டுவாடகை படி ஆகியவற்றில் அளவை நிர்ணயித்துள்ளனர். ஆனால் காவல்துறையில் மட்டும் எப்போதுமே சீனியாரிட்டி அடிப்படையில்தான் வீடுகள் ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால் 25 ஆண்டுகள் காவல்துறை பணியில் சேர்ந்து சிறப்பு ச-ப்இன்ஸ்பெக்டர்கள் என்ற பதவியைப் பெற்ற பிறகு தங்களை சப்இன்ஸ்பெக்டர்கள் அந்தஸ்திற்கு கொண்டு செல்லாமல் தலைமைக் காவலர் அந்தஸ்தில்தான் பணிகள் ஒதுக்கப்படுகிறது.

தங்களுக்கு சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு கிடைத்தும் ஏட்டுகளாகவே இன்னும் பணியாற்றி வரும் நிலையில் 30 ஆண்டுகள் பணிநிறைவு செய்த தங்களுக்கு வீடுகளை ஒதுக்காமல் 5 முதல் 10  ஆண்டுகள் மட்டுமே பணியாற்றி வரும் ஜூனியர் ஆயுதப்படை போலீசாருக்கு வீடுகளை ஒதுக்குவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர்.

இதேபோல ஆண்டுதோறும் தமிழ்நாடு சிறப்பு பிரிவில் பணியாற்றும் போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்படும்போது ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசார் உள்ளூர் போலீஸ் பிரிவிற்கு மாற்றப்படுவது வழக்கம். இவ்வாறு சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு மாற்றப்படும்போது அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆயுதப்படை குடியிருப்பை காலி செய்துவிட்டு சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசாருக்கு வழங்கப்படும் வீடுகளுக்குதான் செல்ல வேண்டும். ஆனால் சட்டம்ஒழுங்கு பிரிவிற்கு மாற்றப்பட்ட பின்னரும் ஆயுதப்படை குடியிருப்பில்தான் பலரும் வசித்து வருகி்னறனர்.

தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு சென்னை மாநகர இணை கமிஷனராக பணியாற்றியபோது தலைமையிட இணை கமிஷனர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். இவர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசார் உடனடியாக வீடுகளை காலிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.  இதன்படி பலரும் வீடுகளை காலிசெய்துவிட்டனர். ஆனால் தற்போது ஆயுதப்படை குடியிருப்பில் பெரும்பாலன வீடுகளை இவர்களே ஆக்கிரமித்துள்ளதால் ஆயுதப்படையி் பணியாற்றும் பலரம் வீடுகள் கிடைக்காமல் அவதியில் உள்ளனர். இந்நிலையில் 30 ஆண்டுகள் பணியாற்றிய தங்களுக்கு 2 படுக்கைகள் கொண்ட வீடுகளை ஒதுக்காமல் தங்களிடம் பணியாற்றும் ஆயுதப்படை போலீசார் ஜூனியர்களாக இருக்கி்ன்றனர் என்பதற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஒதுக்க வேண்டாம் என ஐபிஎஸ் அதிகாரிகள் திட்டமிட்டிருப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர்.

ஆயிரம்விளக்கில் உள்ள கொச்சின்  ஹவுஸ் போலீஸ் குடியிருப்பிலும் 1036 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் வீடுகள் ஒதுக்குவதிலும் உயர் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனர். உயர் அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே அவர்கள் விரும்பும் வீடுகள் ஒதுக்கப்படுகின்னர். சீனியாரிட்டி அடிப்படையில் வழங்குவதாக கூறிவிட்டு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வசதியாக வீடுகளை ஒதுக்குவது எந்த வகையில் நியாயம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட போலீசார். எனவே காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நியாயமான முறையில் வீடுகள் ஒதுக்க ஆவணம் செய்ய வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாக உள்ளது.

சிவ. செல்லையா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading