கேரளாவில் எஸ்டிபிஐ கட்சிப் பிரமுகர் ஷான் கொலையில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் கே.எஸ்.ஷான். எஸ்டிபிஐ (இந்திய சமூக ஜனநாயக கட்சி) கட்சியின் மாநில செயலாளரான இவர், நேற்று முன் தினம் (சனிக்கிழமை) மாலை தனது இருசக்கர வாகனத்தில் மன்னன்சேரி சந்திப்பில் வந்துகொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தைப் பின் தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரை வெட்டிவிட்டு ஓடியது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். அவர் உடலில் 40 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக் கிழமை) அதிகாலை ஒரு கும்பல், பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு சென்று அவரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியது. உடனடியாக ஆழப்புழை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பழிக்குப் பழியாக நடந்த இந்த கொலை சம்பவங்கள் கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில் ஆழப்புழை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே, எஸ்டிபிஐ பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மன்னன்சேரியை சேர்ந்த பிரசாத், மற்றும் குட்டன் என்ற ரத்தீஸ் ஆகியோரை கைது செய்துள்ள போலீசார் இவர்கள்தான் ஷானை கொல்வதற்காக திட்டம் வகுத்தவர்கள் என்று ஆழப்புழை எஸ்.பி. ஜி.ஜெயதேவ் தெரிவித்துள்ளார்.
‘இந்த வழக்கில் இன்னும் சிலர் கைது செய்யப்படுவார்கள். மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்பட்ட பிறகே, கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும். அதே நேரம் ரஞ்சித்தின் கொலை தொடர்பாகவும் சிலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’ என்றும் ஜெயதேவ் கூறியுள்ளார்.