இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 55 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 18ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் 12 பேர் சிறைபிடிக்கப்பட்ட செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய அவர், தமிழ்நாடு மீனவர்களை அடிக்கடி சிறைபிடித்து துன்புறுத்துவதாக இலங்கை கடற்படையினருக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மீனவர்கள் விவகாரத்தில் சம்பிரதாயத்திற்காக கடிதம் எழுதுவதை விடுத்து மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம், மீன்பிடி உரிமையை காப்பதும் ஆகியவற்றிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் உடைமைகளை மீட்கவும் உரிய நடவடிக்கையை மத்திய வெளியுறவுத்துறை மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.








