தமிழ்நாட்டில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ம் தேதியும் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை பல இடங்களில் சதம் அடித்து வருகிறது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் பல இடங்களில் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தாண்டு கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ஏற்கெனவே திட்டமிட்டபடி 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்” என்று கூறியுள்ளார்.







