கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்க, அரசு கூறிய தேதிக்கு முன்னதாக திறக்கப்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 28-ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இந்த நிலையில், சென்னை, ராமாவரம் உள்ளிட்ட சில பகுதிகளில் செயல்படும் தனியாா் பள்ளிகள் அரசின் அறிவிப்புக்கு மாறாக நேற்று வகுப்புகளைத் தொடங்கின. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து கல்வித் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளை தொடா்பு கொண்டு எச்சரிக்கை விடுத்தனா். இதையடுத்து பள்ளி நிா்வாகங்கள் உடனடியாக மாணவா்களை திருப்பி அனுப்பியதாகவும், மீண்டும் பள்ளிகள் 7-ம் தேதி திறக்கப்படும் என்று பெற்றோரிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுதொடா்பாக அமைச்சா் அன்பில் மகேஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது, “கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7-ம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். அதற்கு முன்பாக பள்ளிகளை திறந்தால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சி.பி.எஸ்.இ. பள்ளிகள் 10-ம் வகுப்புக்கு மேல் திறந்திருக்கலாம். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக் கூடங்கள் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.