1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக முதலமைச்சரே முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனிடையே 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த 14ம் தேதி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் கல்வி அதிகாரிகளின் கருத்துக்களை முழுமையாக தொகுத்து அறிக்கையாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமர்ப்பித்துள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். இதன்பின்னர் சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “பள்ளி திறப்பு குறித்து ஒவ்வொரு முதன்மைக் கல்வி அலுவலர்களும் ஒவ்வொரு கருத்தைக் கூறியுள்ளனர். ஆகவே, முதலமைச்சரே முடிவெடுக்கட்டும் என அறிக்கையை அவரிடம் சமர்பித்துவிட்டோம், பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர்தான் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.
மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என சுற்றறிக்கை அனுப்ப உள்ளதாக தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ், 148 மாணவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளுக்கு வர வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.








