தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, சென்னையில், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
2022 – 2023 கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் நிறைவடைந்து கோடை விடுமுறையானது மே மாதம் முழுவதும் விடப்பட்டது. அதன் பின்னர் ஜூன் 1 ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்புக்கு ஜூன் 5 ஆம் தேதி 1 முதல் 5 ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7 ஆம் தேதியாக மாற்றப்படுவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
அதன் பின்னரும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை தொடர்ந்து பதிவாகி வந்ததன் காரணமாகவும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் தரப்பிலும் சமூக வலைதளங்களிலும் பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்ததது. அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையை நீட்டித்து பள்ளிகள் திறக்கும் தேதியை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதியும், 6 முதல் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 12ஆம் தேதியும் திறக்கப்படும் என அறிவித்தது.
அதன்படி தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் செயல்பட தொடங்குகிறது. அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் பள்ளிகளை தூய்மைப்படுத்துதல், மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் 6 ஆம் வகுப்பு, 9ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு ,ஆகிய வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பு திட்டமிட்டதை விட தாமதாக இருப்பதால் அதனை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா









