மாணவர்களை கட்டாயம் வகுப்புக்கு வரச்சொன்னால் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என கூறும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடியாக பள்ளிக்குச் செல்ல…

மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என கூறும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடியாக பள்ளிக்குச் செல்ல தடை கோரி திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் வஹாபுதீன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், “60க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா நோய்த் தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயம் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என கூறுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், கட்டாயமாக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கூறும் பள்ளிகளின் விவரங்கள் மனுதாரர் தெரிவித்தால் அந்த பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தனர். மேலும் வழக்கு குறித்து பள்ளி கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.