எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அரியானாவில் ஒருவர் தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி.ஐ. ஏடிஎம்களை குறிவைத்து, வெளிமாநில கும்பல் நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளை கும்பலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், எஸ்பிஐ வங்கியின் முதன்மை பொது மேலாளருடன் நடத்திய ஆலோசனைக்குப் பின், ஏடிஎம்களில் சோதனை நடத்த வங்கி மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில், பெரியமேடு – வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் சோதனை மேற்கொண்டபோது, 16 லட்சம் ரூபாய் கொள்ளைபோனது தெரியவந்தது. கடந்த 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 190 முறை ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல், கீழ்பாக்கம் அழகப்பா சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. இ-கார்னரில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது. சிசிடிவியை ஆய்வு செய்தபோது இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், பணம் டெபாசிட் செய்யும் எந்திரத்தில் சென்சாரை மறைத்துவைத்து நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், தியாகராய நகர் நார்த் உஸ்மான் சாலையில் உள்ள ஏடிஎம்மில் 70 ரூபாய் ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரியானா சென்ற துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் மூன்று பேர் கொண்ட கும்பலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் இதுவரை 16 புகார்கள் வந்துள்ள நிலையில், முறையான ஆவணங்கள் அளித்த ஏழு புகார்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.







