சென்னை தரமணியிலுள்ள மாநகராட்சிப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தின் முகாமை சென்னை மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் துவங்கி வைத்தனர்.
சென்னை தரமணியிலுள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தின் முகாமை சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன், மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் துவங்கி வைத்தனர். பின்பு முகாமில் நடைபெறும் ஆய்வகம், மனநல ஆலோசனை, எலும்பு மற்றும் இயன்முறை பரிசோதனை, கண் பரிசோதனை முதலியவற்றை ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா ராஜன், “வருமுன் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தொடங்கி வைத்தார். மூன்றாவது முறையாக தற்போது தரமணியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு பல்வேறு விதமான பரிசோதனைகளும் மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. அதனால் மக்கள் முன்வந்து இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், 15 மண்டலத்திலும் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு முகாம் நடைபெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயராக பதவி ஏற்று ஒரு வாரக் காலம்தான் நிறைவடைந்துள்ளது, வருங்காலங்களில் பல திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.









