சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் தாக்குதலில் உயிரிழந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகே அரசடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் செல்போன் கடை நடத்தி வந்தார். கடந்த ஆண்டு ஊரடங்கின் போது, தடையை மீறி, ஜெயராஜ் கடையை திறந்ததாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜூன் 19-ம் தேதி இரவு விசாரணைக்காக ஜெயராஜையும், அவரது மகன் பென்னிக்சையும் அழைத்துச் சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் ஜூன் 22-ம் தேதி பென்னிக்ஸும் 23-ம் தேதி தந்தை ஜெயராஜும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விவரங்களை நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது. அதில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உலகுக்கு சுட்டிக்காட்டியது.
இதனைத் தொடர்ச்சியாக இந்த வழக்கைத் தாமாக முன்வந்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணைக்கு எடுத்தது. மேலும் சிபிசிஐடி வசம் இருந்து வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ரகுகணேஷ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் உரியத் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ்,பென்னிக்ஸ் உயிரிழப்பு நியாயம் கேட்டு போராட்டக் குழுவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் மகா பால்துறை கூறுகையில், “பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் காவல் துறையின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. எந்த குற்றத்தையும் செய்யாத இருவர் விசாரணை என்ற பெயரில் உயிரிழந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் காவல்துறையினர் மீதான அச்சத்தை அதிகரித்துள்ளது. விசாரணை என்ற பெயரில் நடக்கும் இதுபோன்ற சிறைச்சாலை கொலைகளைத் தவிர்க்க அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும்” என வலியுறுத்துகிறார்.
அதேபோல் “சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் மறைவுக்கு நியமான தீர்வு கிடைக்கவேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசு துணையாக இருக்கவேண்டும்” என்கிறார் வியாபாரிகள் சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வேணுகோபால்.