சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜெயராஜின் மகள் பெர்சி மதுரை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு காவல்நிலையத்தில் நடந்த விசாரணையின்போது போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இது குறித்த வழக்கில் கைதான சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கின் முக்கிய சாட்சியான ஜெயராஜின் மகள் பெர்சி நீதிபதி முன்பாக ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதனைத் தொடர்ந்து குறுக்கு விசாரணை நடைபெறவுள்ளது. இந்த வழக்கில் கடந்த 4ஆம் தேதி ஜெயராஜின் மனைவி செல்வராணி சாட்சியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.







