மதுரையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

மதுரையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பணிகளில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசாணைகள் 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், சென்னைத் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இந்தப் போராட்டத்தை தொடங்கினர்.இதனால் , மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து  மாநகராட்சி நிர்வாகம் அவர்களுடன் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் மூன்று முறை  நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனத்தின் மீது நம்பிக்கை இல்லை எனவும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் திட்டவட்டமாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 100க்கும் மேற்ப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு 9 மணியளவில் திடீரென போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து காவல்துறையினர் கைது செய்யப்பட்ட  தூய்மை பணியாளர்கள்  அனைவரையும் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.