குற்ற வழக்குகள் தொடர்புடைய ரவுடி ஒருவரை மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து ஒரு கும்பல் சரமாரியாக வெட்டும் காட்சி அஞ்சாதே திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். அதே போன்றொரு சம்பவம் நிஜத்திலும் அரங்கேறியிருக்கிறது.
சேலம் மாவட்டம், மேட்டூர் தொட்டில் பட்டியைச் சேர்ந்தவர் 22 வயதான ரகுநாதன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெயிண்டிங் வேலை பார்த்து வந்த ரகுநாதன் அப்பகுதியில் வெட்டுக் குத்து கட்டப்பஞ்சாயத்து போன்ற ரவுடிசத்திலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த தகராறில் ஏற்பட்ட சண்டையில் ரகுநாதனை எதிர் தரப்பினர் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த ரகுநாதன் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அப்போது மருத்துவமனை வளாகத்திலுள்ள ரிசப்சன் கவுண்டரின் ரகுநாதன் நின்றிருந்தபோது அங்கேயும் அவரை பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் ரகுநாதனோடு மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சமயத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் ரகுநாதனை கத்தியால் தாக்கத்தொடங்கினர். என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த ரகுநாதன் அந்த கும்பலை சமாளிக்க முடியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்தார். மூவரும் சேர்ந்து ரகுநாதனின் கழுத்தை அறுத்தும், மார்பில் குத்தியும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இவர்களின் இந்த கொடூர செயலைக்கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அருகில் போக அஞ்சி தலைதெரிக்க ஓடினர். இந்த காட்சிகள் அனைத்தும் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புக்காக பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த காட்சியில் ரகுநாதனை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்ற கும்பல், ரகுநாதன் குத்துயிரும் குலை உயிருமாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்தைக் கண்டு மீண்டும் வந்து அவரை துடிக்கதுடிக்க வெட்டும் காட்சி பதைபதைக்க வைக்கிறது. இதில் ரகுநாதன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரகுநாதனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துவிட்டு, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விசாரித்து வந்தனர். போலீசாரின் விசாரணையில் ரவுடிகளான வெள்ளையன், மூர்த்தி, பிரகாஷ், நிவாஷ் ஆகியோர் சேர்ந்து ரகுநாதனை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
போலீசாரின் தொடர் விசாரணையில்தான் கொலைக்கான காரணம் தெரியவந்தது. ரகுநாதனும் வெள்ளையனும் கூட்டாளிகளாக இருந்துள்ளனர். பிறகு ரகுநாதன் வெள்ளையன் அணியில் இருந்து பிரிந்து வேறொரு அணிக்கு சென்றுவிட்டதால் ரகுநாதனுக்கும் வெள்ளையனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாகவே வெள்ளையன் அவரது கூட்டாளிகளோடு சேர்ந்து ரகுநாதனை கொலை செய்துள்ளார்.
கொலையாளிகள் இருக்கும் இடம் அறிந்து அவர்களை போலீசார் துரத்திச் சென்றபோது வெள்ளையன் மற்றும் மூர்த்திக்கு கால் முறிவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரகாஷ், நிவாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்விரோதம் காரணமாக ரவுடி ஒருவர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….