சென்னை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் மதுரையை சேர்ந்த பணி நீக்கம் செய்யப்பட்ட 27 ஆவின் நிறுவன ஊழியர்கள் பணி மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி
வரும் ஆவின் நிறுவனத்தில் மதுரை, தேனி, நாமக்கல், விருதுநகர், திருப்பூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதல் நேரடி பணி நியமனம் மூலமாக முறையாக தேர்வு செய்யப்பட்டு இரண்டு வருடங்களாக பல்வேறு பணிநிலைகளில் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 4 மற்றும் 6ம் தேதிகளில் எந்தவித முன்னறிவிப்பு
கடிதமும் வழங்காமல் ஒன்றியங்களில் பணியாற்றி வந்த 201 பணியாளர்களை திடீரென செயல்முறை ஆணை வழங்கி எங்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் வழிகாட்டுதலின்படி
பணியில் சேர்ந்த இவர்கள் பணிநியமனத்தில் முறைகேடு இருப்பதாக தமிழ்நாடு
கூட்டுறவு சங்கங்களின் சட்டப் பிரிவு 81ன் கீழ் விசாரனை நடத்தப்பட்டு அதன்
அறிக்கையினை ஒவ்வொரு ஒன்றியங்களின் நிர்வாக குழுவிற்கு சமர்பிக்கப்படாமலும்
சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பு கடிதமும் வழங்காமலும்
மேற்கூறிய ஒன்றியங்களில் பணியாற்றி வந்த 201 பணியாளர்களை திடீரென செயல்முறை ஆணை வழங்கி பணிநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை உத்தரவு பெற்றனர். இதன் பின்னும் திருப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் மீண்டும் பணி வழங்கவில்லை. இதற்கு நியாயம் கேட்டு மதுரையை சேர்ந்த 27 பணியாளர்கள் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநில இணை செயலாளர் , தலைவர் ஆகியோர் உள்ளனர்.







