ஆளுங்கட்சியின் வெற்றி தற்காலிகமான, செயற்கையான வெற்றி – ஜி.கே.வாசன் விமர்சனம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் வெற்றி, தற்காலிகமான வெற்றி என்றும், செயற்கையான வெற்றி என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் வெற்றி, தற்காலிகமான வெற்றி என்றும், செயற்கையான வெற்றி என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதியில்
நடைபெற்ற இடைத்தேர்தலில் வெளியான முடிவு என்பது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முறைகேடுகளுக்கு கிடைத்த முடிவாகத்தான் தமாக கருதுகிறது. அதிகப்படியான வாக்கு வித்தியாசம் தான் அதற்கு எடுத்துக்காட்டு.

ஜனநாயகத்தோடு போட்டியிட்டு பணநாயகம் வென்றுவிட்டதாக வாக்காளர்கள்
கருதுகிறார்கள். மக்களிடம் பொதுவாக மனமாற்றம் தேவைப்படுகிறது. அழுத்தத்திற்கு மக்கள் கட்டுபடக் கூடாது. ஆளுங்கட்சியை பொறுத்தவரை அவர்களடைய ஆள்பலம், பணபலம், அதிகாரத்தை வைத்து ஏழை எளிய நடுத்தர மக்களை குறிவைத்து, அவர்களது பலவீனத்தை பயன்படுத்தி, பட்டியில் பூட்டி வைத்து, வாக்குகளை பெறுவது என்பது இந்திய வரலாற்றிலேயே நடைபெறாத வண்ணம் இந்த இடைத்தேர்தலில் நடந்திருக்கிறது.

இதையும் படியுங்கள் : கொங்கு மண்டலத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்த திமுக

ஆளுங்கட்சியின் வெற்றியை தற்காலிகமான வெற்றியாகவே கருதுகிறேன். இந்த வெற்றி செயற்கையான வெற்றி. இனிவரும் தேர்தல்கள் ஜனநாயகத்திற்கான தேர்தல்களாக அமைய வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் கண்ணாடி போல் செயல்பட்டிருக்க வேண்டும். தற்போது உள்ள ஆளுங்கட்சியின் பணபலம், அதிகார பலத்தை தாண்டி தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கருத்தும்.

அத்தனை முறைகேடுகளையும் தாண்டி அதிமுக 43,000 வாக்குகள் பெற்றிருக்கிறது என்றால், உண்மையிலேயே மக்கள் மனதில் அதிமுக இடம்பெற்றிருக்கிறது. இவ்வளவு அழுத்தம் கொடுத்தும் 25 சதவீத வாக்குகள் அதிமுக பெற்று இருக்கிறது என்றால் இனிவரும் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டால் அதிமுக பிரகாசமான வெற்றி பெறுவதற்கான சூழல் இருக்கிறது.

தேர்தல் ஆணையம் இதுபோன்ற தேர்தல்களை நடத்தக்கூடாது. அது வாக்காளர்களின்
விருப்பம் கிடையாது. தேர்தல் ஆணையம் முறையாக, சரியாக கண்காணிக்க வேண்டும்.
இனிவரும் காலங்களிலாவது என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டு, இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது தேர்தல் ஆணையத்தின் கடமை.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தவறிவிட்டன. மேலும் இனி வரும் காலங்களில் பாஜக கூட்டணி சார்ந்த வேட்பாளர்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில், மக்களின் முழு நம்பிக்கையை பெற்று வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.