75-வது சுதந்திர தினமான நாளை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாராதி தேசியக்கொடியை ஏற்றி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உத்தரவின்படி கடந்த 2011 ஆம் ஆண்டு தான் முதல்முறையாக தேசிய கொடி ஏற்றப்பட்டது. அப்போது, திமுக எதிர்க்கட்சியாக இருந்த காலக்கட்டத்தில் தான், திமுக தலைவர் கருணாநிதி உத்தரவின்படி அண்ணா அறிவாலயத்தில் முதல் முறையாக தேசிய கொடி ஏற்றப்பட்டது. திமுக அமைப்புச்செயலாளராக இருந்த டிகேஎஸ் இளங்கோவன் அன்றைய நேரத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் அண்ணா அறிவாலயத்தில் துணைப்பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி போன்ற இரண்டாம் கட்டத்தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றி் வருகின்றனர். இந்நிலையில், கடந்தாண்டு முதல் முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
இந்தாண்டு அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று சென்னை கோட்டையில் சுதந்திர தினவிழாவின் தேசியக் கொடியை ஏற்றுகிறார். இதனால் அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசியக் கொடியை ஏற்றி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாட்டின் விடுதலை திருநாளினையொட்டி, நாளை கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் தி.மு.க. தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை சரியாக 8.00 மணிக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேசியக் கொடி ஏற்றி வைக்கிறார். இதில், சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்