பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாய் பணம் இருந்தது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கடிஹார் ( Katihar)மாவட்டத்தில் உள்ள பஸ்டியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிஷ் குமார் மற்றும் குருசரண் பிஸ்வாஸ். உயர்நிலை வகுப்பில் படிக்கும் மாணவர் களான இவர்களுக்கு அங்குள்ள உத்தர் பீகார் கிராமின் வங்கியில் கணக்கு இருக்கிறது. சீருடை வாங்குவதற்காக அரசு அனுப்பிய பணம் வந்துவிட்டதா என்பதை சரிபாக்க வங்கிக்கு சென்றுள்ளனர்.
வங்கி கணக்கில் இருந்த பணத்தைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைத்துள்ளனர். காரணம், ஆசிஷ் குமார் கணக்கில் 60 கோடியும் குருசரண் பிஸ்வாஸ் கணக்கில் 900 கோடியும் இருந்துள்ளது. சந்தோஷத்தில் இருவரும் ஊரில் போய் கூறியுள்ளனர். ஊர்க்காரர்கள் அனைவரும் தங்களுக்கும் இப்படி ஏதாவது பணம் வந்திருக்குமோ என நினைத்து ஏடிஎம் மையத்தில் குவிந்தனர்.
கூட்டத்தைப் பார்த்து வங்கி அதிகாரிகள் விசாரிக்க, இந்த கோடிகள் விவகாரம் தெரிய வந்துள்ளது. அவர்களுக்கும் இது எப்படி என்று? அதிர்ச்சி. இதுபற்றி மாவட்ட ஆட்சியர் கூறும் போது, வங்கி கம்ப்யூட்டர் சாப்ட்வேர் குளறுபடி காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டுள் ளது. ஆனால், சிறுவர்களின் கணக்கில் இவ்வளவு கோடி இருப்பதாக கணக்கு காட்டுகிறதே தவிர உண்மையில், அவ்வளவு தொகை அதில் இல்லை என்றார்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் தவறுதலாக வங்கி, டெபாசிட் செய்த ரூ.5 லட்சத்தை திருப்பி வழங்க கிராமவாசி ஒருவர் மறுத்து, அது பிரதமர் மோடி வாக்குறுதி அளித்த 15 லட்சத்தின் முதல் தவணை எனக் கூறியது பரபரப்பானது. அந்தப் பணத்தை செலவழித்துவிட்டதாகவும் திருப்பித்தர வழி யில்லை என்றும் கூறியதால் அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.








