வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உயிரிழந்ததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் நிறுவனம் சார்பில், இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய 4 பெண்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா வேட்டி-சேலை வழங்கி இருந்தால், இதுபோன்று ஒரே இடத்தில் பெண்கள் குவிந்திருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
துன்ப நிகழ்வுக்கு காரணமான அதிகாரிகள் மீதும், நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வண்ணம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.







