ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்துக்குப் பிறகு ராஜமவுலி இயக்கி வரும் படம், ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறு வனம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் இந்தப்படத்தைத் தயாரித்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த ஆண்டு இறுதியில் இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. முதலில் 2021 ஜனவரி 8 ஆம் தேதி படம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போனது. அதனால் அக்டோபர் 13, 2021 அன்று திரைப்படம் வெளியாகும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது மீண்டும் இதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இந்தப் படக்குழு ட்விட்டரில், அக்டோபர் மாதத்திற்குள் இறுதிகட்டப் பணிகள் முடிந்து படம் தயாராகிவிடும். ஆனால், படத்தின் ரிலீஸை தள்ளிவைக்கிறோம். திரையரங்குகள் கால வரையறை இன்றி மூடப்பட்டிருக்கும் சூழலில், புதிய ரிலீஸ் தேதியை இப்போது எங்களால் அறிவிக்கமுடியாது எனத் தெரிவித்துள்ளது.








