போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ பிரபல கால்பந்து கிளப்பான மேன்சஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகத் திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு, இரண்டு ஆண்டுகள் தனது அணிக்காக விளையாட ரொனால்டோவுடன் மான்செஸ்டர் யுனைட்டெட் ஒப்பந்தம் செய்து கொண்டது.
நடப்பு சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ரொனால்டோ விளையாடவில்லை. இதற்கு அந்த அணியின் பயிற்சியாளர் எரிக் டென் ஹாக் தான் காரணம் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து பேசிய ரொனால்டோ, “அவர் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர் தனது விளையாட்டு கெரியரை முடித்து விட்ட நிலையில், நான் இன்னும் களத்தில் விளையாடி வருவதும் கூட காரணமாக இருக்கலாம்” என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கப்பட்டதாக கிளப் நிர்வாகம் அறிவித்தது. கிளப் உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர் எரிக் டென் ஹாக் ஆகியோரை பரபரப்பாக விமர்சித்ததன் காரணமாக, இருதரப்பினர் இடையே பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் ஒப்பந்தம் முறித்துக்கொள்ளப்பட்டது.







