நகை வியாபாரியிடம் கொள்ளை; கொள்ளையனை அடையாளம் கண்டது சென்னை போலீஸ்

சென்னை யானை கவுனியில் போலீசார் எனக்கூறி நகை வியாபாரிகளிடம் ஒன்றரை கோடி வழிப்பறியில் ஈடுபட்ட  பிரபல கொள்ளையனை சென்னை தனிப்படை போலீஸ் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை யானை கவுனி பகுதியில் ஆந்திராவைச் சேர்ந்த…

சென்னை யானை கவுனியில் போலீசார் எனக்கூறி நகை வியாபாரிகளிடம் ஒன்றரை கோடி வழிப்பறியில் ஈடுபட்ட  பிரபல கொள்ளையனை சென்னை தனிப்படை போலீஸ் அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை யானை கவுனி பகுதியில் ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரி
சுப்புராவ் மற்றும் அவரது மேலாளர் ரகுமான் ஆகிய இருவரும் நகை வாங்குவதற்காக ஒன்றரை கோடி பணத்துடன் ஆட்டோவில் செல்லும் போது, போலீசார் என கூறி ஒரு  கும்பல்  பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.

கணக்கில் வராத பணத்தை கொண்டு வந்ததாக கூறி, ஏமாற்றி போலீஸ் வாகனம் போல் ஏற்பாடு செய்து  லத்தி, கை விலங்குடன் வந்த நபர்களை போலீசார் என நம்பி ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை இழந்தனர். இது தொடர்பாக யானைக்கவுனி போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கொள்ளை நடந்த சம்பவத்தை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், சிபிசிஐடி, மாவட்ட மத்திய குற்றப்பிரிவு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ஆயுதச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல கொள்ளையன் இம்ரான் என்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக வேலூர், தஞ்சாவூர், விழுப்புரம், குடியாத்தம் ,தாம்பரம் கொடுங்கையூர் , வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 17 வழக்குகள் இம்ரான் மீது நிலுவையில் உள்ளது. கொள்ளையன் இம்ரான் கள்ளக்காதல் விவகாரத்தில் சென்னையிலிருந்து தப்பி சென்று வேலூரில் காவலரையே கார் ஏற்றிக் கொல்ல முயன்ற நபர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ளும் போது வெடிகுண்டு, துப்பாக்கி , கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இவ்வாறு பல்வேறு பயங்கர வழக்குகளில் தொடர்புடைய கொள்ளை கும்பல் சேர்ந்த இம்ரான் தலைமையிலான கும்பலே நகை வியாபாரிகளிடமிருந்து ஒன்றரை கோடி பணத்தை போலீசார் என நாடகமாடி கொள்ளை அடித்துச் சென்றது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ஹவாலா பணப் பரிமாற்றம் மற்றும் கணக்கில் வராத பணத்தை எடுத்துக் கொண்டு வரும் நகை வியாபாரிகள் உள்ளிட்டவற்றை அறிந்து அவர்களை குறி வைத்து கொள்ளையடித்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தமிழக முழுவதும்
வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதி தலைமையில் ஐந்து தனிப்படை போலீசார் கொள்ளை கும்பல் தலைவன் இம்ரானையும் மற்றும் கூட்டாளிகளையும் சுற்றி வளைத்து பிடிக்க தீவிரமாக தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டுள்ளனர்.

ஆயுத சட்டம் மற்றும் சிபிசிஐடி, சி சி பி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விசாரணை பிரிவு மூலம் தேடப்படும் பிரபல கொள்ளையன் மீண்டும் சென்னையில் பட்டப் பகலில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.