வடகிழக்கு மாநிலங்களில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கதேசம் வழியாக மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவுக்கு பேருந்து சேவையை திரிபுரா தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக அசாம் மாநிலத்தில் கடும் மழைப்பொழிவு காணப்பட்டது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மட்டுமல்லாது, பல கிராமங்கள் தொடர்பிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தற்போது அசாம் மட்டுமல்லாது மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் இம்மாநிலங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. இந்த மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த தொடர் கனமழை காரணமாக திரிபுரா, மேகாலயாவுடனான சாலை போக்குவரத்தை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்டவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து வெளியேற கொல்கத்தாவுக்கு சிறப்பு பேருந்து சேவையை திரிபுரா மாநில அரசு உருவாக்கியுள்ளது.
அதேபோல அகர்தாலா விமான நிலையத்திற்கு கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு திரிபுரா அரசு கோரிக்கை வைத்துள்ளது. மேகாலயாவுடனான சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், வங்கதேசம் வழியாக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு பேருந்து சேவையை திரிபுரா தொடங்கியுள்ளது.
கனமழை காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமை பொறுத்த அளவில் 18 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் சுமார் 75,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
உலகில் அதிக அளவு மழைபொழிவை கொண்டுள்ள மேகாலயாவின் ‘சிரபுஞ்சியில்’ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 811.6 மி.மீ மழை பொழிந்தது. இந்நிலையில் இன்று 972 மி.மீ மழை பொழிவை சிரபுஞ்சி பெற்றுள்ளது. கடந்த 1995க்கு பின்னர் 900 மி.மீக்கு அதிகமாக மழை பெய்வது இதுவே முதல் முறையாகும். கடந்த 1995 ஜூன் 16ம் தேதி சிரபுஞ்சி 1,563.3 மி.மீ அளவு மழை பொழிவை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.