தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நாகாலா ந்து மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் ஆளுநராக பணியாற்றி வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் முழு நேர ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் பகுதி நேர ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி என முழுப்பெயர் கொண்ட ஆர்.என்.ரவி, பிகார் மாநிலம் பாட்னாவை பூர்வீகமாக கொண்டவராவார். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், கேரள காவல்துறையில் 1976 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் கொண்டவராவார்.
இதனையடுத்து மத்திய புலனாய்வு துறையில் பணியாற்றிய இவர், ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியுள்ளார். அதே போல எல்லையோர மக்களின் அரசியல், சமூகவியலில் ஏற்படும் தாக்கங்களை ஆராய்ந்து அரசின் பல திட்டங்களுக்கு அடித்தளமிட்டுள்ளார்.
2018ல் தேசிய துணை ஆலோசகராக பணியாற்றிய இவர் 2019 ஆகஸ்ட் முதல் நாகாலாந்தின் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்று பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோகித்தை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், முதலமைச்சராக ஆனபோதும் தனிப்பட்ட முறையில் தன்னிடம் பன்வாரிலால் புரோகித் அன்புடன் பழகியவர் என நினைவு கூர்ந்துள்ளார். குறுகிய காலமே பழகி இருந்தாலும் இனிமையான மறக்க முடியாததாக வை நட்பு அமைந்திருந்தது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவி-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.








