மதுரையில் பாடி ஸ்ப்ரே உடன் வந்து திருட தெரியாமல் திரும்பி சென்ற திருடனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள பிரபல எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் நேற்று நடந்த கொள்ளை முயற்சி தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் டவுசர் அணிந்து வந்த வாலிபர் பாடி ஸ்ப்ரே மற்றும் மின் உபகரணப்பொருளுடன் வந்த சுமார் அரை மணி நேரம் போராடி திறக்க முடியாத விரக்தியில் திரும்பிச் சென்றுள்ளார்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பெத்தானியாபுரம் பகுதியில் அரங்கேறிய இந்த கொள்ளை முயற்சியில் திருடனின் நடவடிக்கைகள் முற்றிலும் வித்தியாசமாக இருந்துள்ளது. பொதுவாக இதுபோன்ற கொள்ளைக்கு பிறந்தநாள் விழாவுக்கு பயன்படுத்தப்படும் வெள்ளை நிற ஸ்ப்ரேதான் உபயோகிக்கப்படும். இதில் சாதாரண பாடி ஸ்ப்ரேவை கொண்டு கேமிராவை மறைக்க முயன்றுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் அடித்த ஸ்ப்ரே அனைத்தும் கரைந்து வீடியோ தெளிவாக தெரிய தொடங்கியுள்ளது.
இதனை மறைக்க குப்பை தொட்டியில் இருந்தை காகிதங்களை எடுத்து கேமிராவில் ஒட்ட முயன்றுள்ளார். ஆனால், அந்த காகிதமும் ஒட்டாமல் கீழே விழுந்துள்ளது. இறுதி முயற்சியாக கையில் வைத்திருந்த உபகரணங்களை கொண்டு ஏடிஎம் மெசினை உடைக்க முயன்றுள்ளார். ஆனால் முயற்சி பலனளிவில்லை. இதனையடுத்து அவர் திரும்பி சென்றுவிட்டார்.
இதனையடுத்து ஏடிஎம் இயந்திரம் செயலிழந்ததால் வங்கி அதிகாரிகளுக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.








