இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கி நடிகர் தனுஷ் நடித்து வெளியான ராஞ்சனா படத்தின் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டிலை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ், கோலிவுட் மற்றும் பாலிவுட்டை தாண்டி தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்துவருகிறார். இவர் பிரபல நடிகர்களான ரயான் காஸ்லிங், க்ரிஸ் எவன்ஸ் ஆகியோர் நடித்திருந்த ’தி கிரே மேன்’ படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார்.
கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் பாலிவுட்டில் ’ராஞ்சனா’ எனும் படம் உருவானது. இது தான் ஹிந்தியில் தனுஷ் நடித்த முதல் படமாகும். இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற தலைப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதில் பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர், அபய் டியோல், ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இன்றுடன் ராஞ்சனா படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவடைந்தது. இதனை தனுஷ் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில் ஆனந்த் எல் ராய் மற்றும் தனுஷும் மீண்டும் இணைந்து தற்போது உருவாகும் படத்தின் டைட்டில் வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் “சில படங்கள் நம் வாழ்வை மாற்றக்கூடியவை. ராஞ்சனாவை கிளாசிக்காக மாற்றியவர்களுக்கு நன்றி கூறுகிறேன். தற்போது, இப்படம் 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி இதே கதையுலகத்துடன் தொடர்புடைய ’தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் நடிக்கிறேன். இந்தப் பயணம் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால், நமக்கு ஒரு சாகசமாக இருக்கும்.” எனத் பதிவிட்டுள்ளார்.




