30 ஆண்டுகளாக அரசு பேருந்து ஒட்டிய ஒட்டுநர், ஒய்வு நாளில் பேருந்தை பிரிய மனமில்லாமல் கட்டியணைத்து கண்ணீர் விட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து பணிமனையில் 30 ஆண்டுகளாக ஓட்டுநராக பணியாற்றியவர் முத்துப்பாண்டி. இவர் பைக்காராவை பகுதியைச் சேர்ந்தவர். இவர் 60 வயதை எட்டியதால் ஓட்டுநர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது பணியின் கடைசி நாளன்று மதுரை திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து, திருப்பரங்குன்றம் வழியாக அனுப்பானடி மற்றும் மகாலட்சுமி காலனி செல்லும் பேருந்தை இயக்கினார்.
பின்னர் இத்தனை ஆண்டுகளாக பொதுமக்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஓட்டியதை நினைத்து, தான் கடைசியாக ஓட்டி வந்த அரசு பேருந்தை வணங்கி முத்தமிட்டு, கண்ணீர் ததும்ப கட்டித் தழுவினார். மேலும் இந்த பணியின் மூலம் தனக்கு நடைபெற்ற திருமணம், சமூகத்தில் கிடைத்த மதிப்பு உள்ளிட்ட பயன்களை எடுத்துக் கூறி மகிழ்ச்சியுடன் பணி ஓய்வு பெறுவதாக கூறினார். இவர் ஓய்வு பெறுவதையடுத்து, சக ஊழியர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து பேசிய காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.







