”ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு; முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” – அமைச்சர் உதயநிதி

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் ஜூன் 13 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி…

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வரும் ஜூன் 13 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடைபெறவுள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, உறுப்பினர் செயலாளர் மேக்நாத் ரெட்டி, இந்திய ஸ்குவாஷ் பயிற்சியாளர் சைரஸ் போன்சா, இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்வதேச ஸ்குவாஷ் உலகக் கோப்பை வரும் ஜூன் 13 முதல் 17 ஆம் தேதி வரை சென்னை EA மாலில் நடைபெறவுள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சர்வதேச ஸ்குவாஷ் போட்டிகள் நடத்த ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. அதனை மையமாக வைத்து ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடருக்காக 1.5 கோடி ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்க தலைவர் ராமச்சந்திரனிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது :

“ஸ்குவாஷ் உலகக் கோப்பையை சென்னையில் நடத்தும் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. ஸ்குவாஷ் உலகக் கோப்பை தமிழ்நாட்டில் நடைபெறுவதால் இது தமிழ்நாட்டிற்கு பெருமை. தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பது அரசின் நோக்கம், அதற்காகத்தான் இந்த போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்திய அணியை இந்திய வீரர் சவுரவ் கோஷல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் வழிநடத்தவுள்ளனர்.

இதில் ஜப்பான், சீனா, எகிப்து, தென் ஆப்ரிக்கா, மலேஷியா என பல நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்குவாஷ் போட்டியை சேர்க்க வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தை முன் வைத்து இந்த போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள EA மாலில் இந்த போட்டிகள் நடைபெறும். அரசு சர்வதேச போட்டிகளை நடத்துவது வருவாய் நோக்கத்தில் இல்லை. விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மற்றும் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தான் நடத்தப்படுகின்றன.”

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் ஸ்குவாஷ் வீரர்களுக்கு தமிழ்நாடு அரசின் பணியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த யோசனை இருக்கிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.