பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள டாப்சிலிப் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாகும். டாப்சிலிப்பிற்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். டாப்சிலிப்பில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாம் மிகவும் பிரசித்தி பெற்றது. யானைகள் முகாமில் யானைகளுக்கு உணவு வழங்குவது, முகாமில் யானைகளின் விளையாட்டு போன்றவற்றை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலக மலைவாழ் மக்கள் தின நாளையொட்டியும் ,நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான நிறைவு விழாயொட்டியும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. ஆனைமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநர் கணேசன் அவர்களின் உத்தரவின்படி, இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் செஸ் அணிவகுப்பு நிகழ்ச்சி டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள வன அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யானைகளை தயார் செய்யும் பொழுது யானைகள் மீது பிளாஸ்டிக் கவரால் ஆன பிளக்ஸ் கவரை கும்கி யானைகள் மீது போர்வை போல் போர்த்தியுள்ளனர். இதனால் பிளக்ஸ் கவரிலிருந்து வெளிப்படும் வாசனையைக் கண்டு அச்சம் அடைந்த இரண்டு கும்கி யானைகள் அந்தக் கூட்டத்தில் இருந்து மிரண்டு வனப்பகுதிக்குள் ஓடியது. பின்னர் கும்கி யானைகளை பாகன்கள் சமாதானப்படுத்தி காட்டிற்குள் இருந்து அழைத்து வந்தனர். பின்பு கட்டாயப்படுத்திய நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ள சதுரங்க பலகையை சுற்றிவர யானைகளை வனத்துறையினர் துன்புறுத்தி உள்ளனர். இச்சம்பவம் டாப்ஸ்லிப் பகுதியை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகளிடம் முகச்சுழிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது..
கும்கி யானைகளை துன்புறுத்தி பிளாஸ்டிக் கவர்களை அதன்மேல் போர்த்தி பலம்மிக்க கும்கி யானைகளை ஒரு காட்சி பொருளாக்கி உள்ளது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.எனவே இந்திய வனச் சட்டம் 1972 பிரிவின் கீழ் இது தண்டனைக்குரிய செயலாகும். மேலும் வனப்பகுதிக்குள் உள்ள யானைகளுக்கு பிளாஸ்டிக் பிளக்ஸ் பேனர்களை போற்றி யானைகளை துன்புறுத்திய ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரப்பி வருகின்றனர்.







