இலங்கையில் கடைசி தமிழ் மன்னனின் பெயர்பலகை அகற்றம்

இலங்கையில் மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் எனும் பெயர்ப்பலகை வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.   தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 நினைவு விழாவை முன்னிட்டு இலங்கையில்…

இலங்கையில் மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் எனும் பெயர்ப்பலகை வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.

 

தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 நினைவு விழாவை முன்னிட்டு இலங்கையில் உள்ள வவுனியா நகரசபையினரினால் கடந்த 25-ஆம் தேதி, நகர மத்தியில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் என பெயர்ப் பலகை திறந்து வைக்கப்பட்டது.

 

இந்த நிலையில், பெயர்ப் பலகை திறந்து வைக்கப்பட்டு 4 நாட்கள் கடந்த நிலையில், 29ஆம் தேதி பெயர்ப் பலகை, சாலை மறுசீராய்வு பணியில் ஈடுபடுபவர்களினால் திடீரென அகற்றப்பட்டது. இது குறித்து சாலை பணிகளில் ஈடுபட்டவர்களிடம் கேட்டபோது, சாலைகளை மறு சீரமைப்பு செய்து வருவதாகவும், இந்த பணிக்கு அந்த பெயர் பலகை இடையூறாக இருந்ததால், அதனை அகற்றியதாகவும் தெரிவித்தனர்.

தமிழ் மன்னனின் பெயர் பலகை திடீரென அகற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வவுனியா நகரசபையினர் விளக்கமளித்தனர்.அப்போது, சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால், பெயர்ப் பலகை அகற்றப்பட்டுள்ளது. மேலும் பணிகள் நிறைவடைந்த பின்னர் முந்தைய பெயர்ப் பலகையை விட சிறப்பான பெயர் பலகை அப்பகுதியில் வைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சாலை மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவது தெரிந்தும் அவசரமாக பெயர்ப் பலகையினை திறந்து 4 நாட்களில் அது அகற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சபை நிதியும் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது .

யார் இந்த பண்டார வன்னியன்?

இலங்கையின் வன்னி பகுதியை 18ஆம் நூற்றாண்டில் ஆண்ட கடைசி தமிழ் மன்னர் பண்டார வன்னியன் . இலங்கையை தங்கள் ஆளுகைக்கு கீழ் கொண்டு வர முயன்ற ஆங்கிலேயே, டச்சு ஆட்சியாளருக்கு எதிராக தீரமுடன் போராடிய மன்னர். குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன் என்ற இயற்பெயருடைய அவர், ஆங்கிலேயர்களுக்கு எதிரான சண்டையில் 1810 அக்டோபர் மாதம் வீரமரணமடைந்தார். அவருடைய தீரத்தை நினைவுகூறும் வகையில் தேசிய மாவீரன் என்ற பட்டம் 1982ல் இலங்கை அரசால் அவருக்கு வழங்கப்பட்டது.

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.