திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் மற்றும் நிவாரன உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை திருவொற்றியூர் அரிவாளக்குளத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. நேற்று குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டதால் அங்கு வசித்த மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், இன்று காலை அங்கு ஏற்பட்ட விரிசல் அதிகமாகி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. மக்கள் முன்கூட்டியே வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால், அங்கு வசித்த மக்கள் தங்களது உடமைகளை இழந்து தங்களது வீடு இருந்த இடத்தை பார்த்து கதறி அழுதனர்.
இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்படைந்த 24 குடும்பத்துக்கும் ரூ.1 லட்சம் நிவாரணம் மற்றும் மாற்று வீடுகள் உடனடியாக வழங்கப்படும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அங்குள்ள அனைத்து குடியிருப்புகளிலும் வல்லுநர் குழு ஆய்வு செய்யும் எனவும் தரமில்லாத வீடுகளில் வசிப்போருக்கு உடனடியாக மாற்று இடம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.








