மயிலாடுதுறை, சீர்காழியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான ஓஎஸ் மணியன் நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ்.மணியன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் வடியாத நிலையில் இளம் சம்பா நாற்றுகள் அனைத்தும் அழிந்து விட்டதாகவும் ஏற்கனவே பெய்த மழையில் பாதிக்கப்பட்டு மீண்டும் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் இருந்த தடம் தெரியாமல் அழிந்து விட்டதாகவும் கூறினார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் வேலை இன்றி தவித்து வரும் நிலையில், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுகா பகுதிகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்தது ஏற்புடையது அல்ல என்றார். மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் தாலுகாவைச் சேர்ந்த அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மின்சாரம் இல்லாத கிராமங்களில் மெழுகுவர்த்தி வாங்க கூட பணம் இன்றி பொதுமக்கள் விறகு மற்றும் சுள்ளிகளை எரித்து பொழுதை கழித்து வருவதாக குறிப்பிட்ட ஓ.எஸ்.மணியன், அதிமுக ஆட்சியில் வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு முகாம்களில் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒருவேளை அல்லது இரண்டு வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு நேற்றுடன் நிவாரண முகாம்கள் அனைத்தையும் தமிழக அரசு மூடிவிட்டது என குற்றம்சாட்டினார்.
தமிழக அரசு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஆறுகளில் சேர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் காரணமாக தண்ணீர் வடிவதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. ஆகாய தாமரைகளை அகற்றுவதற்கு மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர்கள் நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியும், நிதி ஒதுக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.








