பழுதான மின் பெட்டியை  தொட்ட சிறுவன் உயிரிழப்பு:  பொதுமக்கள்  சாலைமறியல்!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பழதான மின்சார பெட்டியை தவறுதலாக தொட்ட 14 வயது சிறுவன்  மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வசிப்பவர் தேவி (45).…

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பழதான மின்சார பெட்டியை தவறுதலாக தொட்ட 14 வயது சிறுவன்  மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வசிப்பவர் தேவி (45). கணவனை இழந்த தேவி தன்னுடைய இரண்டு மகன்கள் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். இதில் இளைய மகன் ரூபேஷ் வயது 14. அவர்  அருகில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை பள்ளியில்  ஒன்பதாம் வகுப்பு  படித்து வந்தார். வீட்டின் அருகே கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள உயர் மின் விளக்கு கோபுரத்தின் கீழ் உள்ள மின்சார பெட்டியை தொட்டதாக தெரிகிறது.
இதில் மின்சாரம் தாக்கி ரூபேஷ்  மயக்கம் அடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் மின்விளக்கு பெட்டியில் இருந்த ரூபேஷின் கைகளை அகற்றிவிட்டு. ரூபேஷை மீஞ்சூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு  சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் இதை ஏற்க  மறுத்த  உறவினர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிறுவனை  சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு  மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மீஞ்சூர் பொன்னேரி சாலையில்  மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் அங்கு சென்ற  பொன்னேரி வட்டாட்சியர்  செல்வகுமார்  நடத்திய  சமரச  பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. ஏற்கனவே அதே இடத்தில்  மின்சாரம் தாக்கி இரு ஆடுகள் உயிரிழந்ததாகவும், புகார் தெரிவித்தும் மின் வாரிய  ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.