பெகாசஸ் உளவு சர்ச்சை, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் 40 மணி நேர அலுவல்கள் பாதிக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கியது. மாநிலங்களவை கூட்டத்தொடர் தினமும் 6 மணி நேரம் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநிலங்களவை எதிர்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ் உளவு சர்ச்சை குறித்தும், மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தும் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஒரு நாள் கூட மாநிலங்களவை முழு நேரமும் செயல்படவில்லை.
மாநிலங்களவை உறுப்பினர்களின் அமளி காரணமாக பூஜ்ய நேரத்தின் போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய 130 விஷயங்களும் , சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த 87 விஷயங்களும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
மாநிலங்களவை இதுவரை 50 மணி நேரம் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மாநிலங்களவையின் 39.52 மணி நேரம் எந்தவித விவாதமும் இன்றி வீணானது.
எதிர்கட்சிகளின் அமளிக்கு இடையே மாநிலங்களவை செயல்பட்ட ஒன்றரை மணி நேரம் மட்டும் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன .பெகாசஸ் உளவு சர்ச்சை தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிக்கை சமர்பித்தார். அபோது இது குறித்து 4.37 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இதைத் தவிர வேறு எந்த நிகழ்வுகளும் மாநிலங்களவையில் நடைபெறவில்லை.







