நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று மாநிலங்களவை, அவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு தலைமையில் இன்று காலை 11 மணிக்குக் கூடியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதல் நிகழ்வாக மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா. சிதம்பரம் உள்ளிட்ட 28 புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதையடுத்து, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே, ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அதிபர் ஷேக் கலிபா பின் ஜயத் அல் நயான், கென்ய முன்னாள் அதிபர் வாய் கிபாகி ஆகியோரின் மறைவுக்கு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினர்களான கிஷோர் குமார் மொகந்தி, ராபர்ட் கர்ஷீங், கே.கே. வீரப்பன் ஆகியோரின் மறைவுக்கும் மாநிலங்களவை அஞ்சலி செலுத்தியது.
இதையடுத்து, மாநிலங்களவையின் வழக்கமான அலுவல்கள் தொடங்கின. எனினும், காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவ சேனா கட்சிகளின் உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
சர்வாதிகாரம் ஒருபோதும் வெற்றி பெறாது என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அமைதிகாக்குமாறு அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களிடம் அவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு பலமுறை வேண்டுகோள் விடுத்தார். எனினும், அமளி தொடர்ந்தது. அப்போது, அவை நடவடிக்கையை குலைக்க வேண்டும் எனும் நோக்கோடு சிலர் வந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.