முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு 8ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த
ரவிச்சந்திரன் கடந்த 1992-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை பொய்யாழி இறந்த நிலையில், தாயார் ராஜேஸ்வரி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் உள்ள
சூரப்பன்நாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார். இந்நிலையில், தனது வேளாண் நிலத்தைப் பராமரிக்கவும், தனக்கு வலது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவியாக இருக்க தனது மகன் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்கக் கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்
செய்திருந்தார். இந்நிலையில் நீதிமன்றம் அளித்த பரிசீலனையின் அடிப்படையில் தமிழக உள்துறை ரவிச்சந்திரனுக்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் 30 நாட்கள் பரோல் வழங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, மதுரை மத்திய சிறையில் விடுவிக்கப்பட்ட ரவிச்சந்திரன் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடியில் தனது தாயார் வசிக்கக் கூடிய
சூரப்பன்நாயக்கன்பட்டி கிராமத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இதனிடையே ரவிசந்திரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவ ஓய்வில் உள்ளார்.
நவம்பர் மாதம் முதல் 7 முறை பரோல் நீட்டிப்பு செய்த நிலையில், இன்றுடன் பரோல் காலம் முடிவடையவுள்ளது. இன்று முதல் 8ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் வரும் ஜூலை 14 ஆம் தேதி வரை பரோல் நீட்டிப்பு அளித்து சிறை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-ம.பவித்ரா